நூல்களுக்கான விமர்சனங்களே படைப்பாளியை செழுமைப் படுத்துகின்றன. எழுத்தாளரும், ஊடகவியலாளருமான அ.மயூரனுடன் ஒரு நேர் காணல்.
தினக்குரல் பேப்பருக்கு 1.08.10 அன்று நான் வழங்கிய நேர்காணல். - நேர்கண்டவர். கவிதா ரஜீவன். தினக்குரல் ஆசிரியர் பீடம்.
1. உங்கள் படைப்புலகப் பிரவேசம் எப்பொழுது ஆரம்பமானது உங்கள் முதற்படைப்பு பற்றிக் குறிப்பிட முடியுமா?
எனது படைப்புலகப் பிரவேசம் புலம்பெயர் நாட்டில் கடுகதி வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்வியற் சூழலில் எனக்குக் கிடைத்த சிறிய ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி எனக்குத் தெரிந்த அறிவியற் கருத்துக்களை ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் புலம்பெயர் மக்களுக்கு சொல்லவேண்டும். என்ற உணர்வினால் உந்தப்பெற்று லண்டனிலிருந்து மாதமிருமுறை வெளிவரும் “ஒருபேப்பர்” என்கின்ற இதழில் “பறக்கும் தட்டுக்கள்” என்ற தலைப்பில் வானில் தென்படும் மர்மப்பொருள் பற்றிய விரிவான அறிவியல்த் தொடர் ஒன்றை எழுதியிருந்தேன். இதுதான் எனது முதலாவது கன்னிப்படைப்பு.
2. இயந்திரமயமாக வாழ வேண்டிய ஒருநாட்டில் இருந்துகொண்டு எப்படி உங்களால் இலக்கிய முயற்சிகளிலும் ஈடுபட முடிகிறது?
உண்மையில் மேற்குலக நாடுகளில் வாழ்பவர்கள். இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுவது மிக்க் கடினமானதொன்று. அதிலும் இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுவது முடியாத காரியம். ஏனெனில் இலக்கிய ஆய்வுகளுக்கு வேண்டிய நூல்களைப் பெறுவது மிகவும் கடினம். அத்தோடு இலக்கியக் கருத்தாடல்களில் ஈடுபடுவதற்கான இலக்கிய வாதிகளை அல்லது இலக்கிய அறிவுடையவர்களை சந்திப்பதென்பதும் கடினமானது. ஆனால் மேற்குலக் நாடுகளில் குறிப்பாக லண்டனில் மாத்திரம் ஈழத்தமிழர்கள் சிதறி வாழாமல் லண்டன் நகர எல்லைக்குள்ளேயே வாழ்வதனால் இலக்கியக் கருத்தாடல்களிலும், ஆரோக்கியமான இலக்கிய விவாதங்களில் ஈடுபடக் கூடியதுமான இலக்கிய அறிவுடைய நண்பர்களும், நூல்களைப் பெறக்கூடிய தனிப்பட்ட நூலகங்களை வைத்திருக்கும் சிலரும் எனக்கு அறிமுகமாகி இருந்த்தனால் இம்முயற்சியில் ஈடுபடுவதற்கானதொரு காலச்சூழ்நிலையை ஏற்படுத்திற்று.
3. இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை என்ற விமர்சன ரீதியான உங்கள் நூலுக்கு கடும் விமர்சனங்கள் வந்திருக்கும் அவற்றை நீங்கள் எதிர்பார்த்தீர்களா? விமர்சனங்களை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறீர்கள்?
(என்னுடைய புத்தகம்)
இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை என்ற தலைப்பிலிருந்தே எனக்கு வில்லங்கமான பல விமர்சனங்கள் வந்து குவியும் என எதிர்பார்த்தேன். அதுவே நிகழ்ந்த்து. ஏன் இந்நூல் வெளியீட்டு விழாவிற்கான மண்டபத்தை லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய நிர்வாகம் எனக்குத் தந்துதவியபோதும் ஆலய நிர்வாகத்திற்கு கடும் விமர்சனங்கள் குவிந்த்திலிருந்து எண்ணிப்பாருங்கள். இந்நூலுக்கு எவ்வாறான விமர்சனங்கள் கிளம்பியிருக்கும் எண்டு. ஒரு நூலுக்கு எவ்வளவு விமர்சனங்கள் வருகின்றதோ அந்தளவிற்கு அந்தப் படைப்பாளி செழிமைப்படுத்தப்படுகின்றான், புடம்போடப்படுகின்றான். ஆரோக்கியமான விமர்சனங்களும், வியாக்கியானங்களும் எனது படைப்பின் நேர்த்தியை மேலும் வழிப்படுத்தும் என நான் நம்புகிறேன்.
விமர்சனங்கள் அதிகரிக்கின்ற போதுதான் அது பற்றி ஆராய பலரையும் தூண்டும். நான் இட்ட ஒரு பொறி பல்லாயிரமாகச் சிதறி ஒளிப்பிளம்பாக தமிழ் இலக்கிய உலகம் உண்மையைத் தேடி ஆராய்ந்து வரலாற்றுத் திரிபுகளையும், மத்த்தின் பெயரால் மூடிமறைக்கப்பட்டிருக்கும் பொய்மைகளையும் வெளி உலகிற்குக் கொண்டுவரும். பல ஆயிரம் ஆண்டுகால நம்பிக்கையை எனது ஒரு சிறிய படைப்பு உடைத்துவிடும் என எதிர்பார்க்க முடியாதுதான். நீண்டகால வரலாற்று ஓட்டத்தில் எனது கருத்துக்கள் ஆலம்விருட்சமாக வளர்வது தவிர்க்கமுடியாத்தொன்றே.
4. கம்பருக்கு கழகங்கள் அமைத்து கம்பன் புகழ் வளர்த்து கம்பராமாயணத்தை கௌரவப்படுத்தி வரும் நிலையிலும், படித்தவர்கள் முதல் பாமர்ர்வரை அதனை நம்பி இராமர், ஆஞ்சநேயர் போன்ற இராமாயணக் கதாபாத்திரங்களை வழிபட்டு வரும் நிலையிலும், இராமாயணம் உண்மையான வரலாறு அல்ல புனைகதையே என்றும் அது சமூகத் தேவையைப் பிரச்சாரப்படுத்துகின்ற ஒரு பிரச்சார ஊடகம் என்பதையும் நீங்கள் உங்கள் நூலில் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினாலும் அதனை மக்கள் எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்வார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்? இந்நூல் மக்களிடத்திலே மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறீர்களா?
மாற்றங்கள் என்றும் மாறாத மனித த்த்துவங்கள். மாற்றங்கள் இல்லையேல் மனிதவாழ்வு அற்றமற்றதாகிவிடும். புவி கோளவடிவானதென்பதை அண்மையில் தான் கிறிஸ்தவ தலைமைப்பீடமான வத்திக்கான் ஏற்றுக்கொண்டது. உண்மையைக் கூறியவருக்கும் மரண தண்டணை அல்லவா இந்த உலகம் வழங்கியது. நாங்கள் இராமாயணக்கதை என்றுதானே சொல்கின்றோம். கதை என்றால் கற்பனை ரீதியாக்க் கூறுவது தானே. கம்பரே அவையடக்கம் என்ற பகுதியில் இராமகாதை என்றுதான் கூறுகின்றார். மேலும் இராமனுக்குக் கோயில்கட்டிய மக்கள் இன்று கம்பனுக்கும் கோயில்கட்டத் தொடங்கிவிட்டனர். அப்படியானால் வருங்காலத்தில் ஹரிப்பொட்டருக்கும், ஸ்பைட்டமானுக்கும் கோயில்கட்ட வேண்டிய காலமெல்லவா வரும்.
அத்தோடு குஷ்புவுக்குக் கட்டிய கோயில் என்னவாற்று. தமிழக சாமியார்களின் கூத்துக்கள் தற்போது அம்பலப்படுகின்றதல்லவா? காலங்கள் மாறும். கருத்துக்கள் மாறும். உண்மைகள் உலகறிய உரைக்கப்படும். அதுவரை என் போன்ற இலக்கிய வாதிகள் விமர்சிக்கப்டுவார்கள். ஆனால் நாங்கள் ஓயமாட்டோம்.
5. இராமாயணத்தில் பல இடைச் செருகல்கள் இருப்பதாக இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது. அவையாரால் எப்போது மேற்கொள்ளப்பட்டன என்று அறிய முடியுமா?
இடைச்செருகல் என்பதை மிகத்துல்லியமாக யாரால் எப்போது மேற்கொள்ளப்பட்டது. என்பதைச் சொல்லமுடியாதுதான். ஆனால் இடைச்செருகல் நிகழ்ந்திருக்கின்றதென்பதை உறுதிபடக் கூறமுடியும். அதற்கான ஆதாரங்களை நான் ஏலவே நூலில் குறிப்பிட்டுள்ளேன். இடைச்செருகல்கள் பலவேறு காலகட்டங்களில் பலரால் மேற்கொள்ளப்பட்டவை என்பதுதான் உண்மை ஏனெனில் பழைய ஏட்டுச்சுவடிகளின் ஆயுட்காலம் 300 வருடங்களே. அதன்பின் அவை செல்லரித்துச் சிதைவடைந்துவிடும். ஆகவே 300 வருடங்களுக்கொருமுறை படியெடுக்க வேண்டும். அப்படியிருக்கும் போது. ஒருசில ஆயிரம் ஆண்டுகள் முன் நடந்த்தாக கூறப்படும் கதையை எத்தனை தரம் படியெடுத்திருப்பார்கள். எத்தனை பேர் படியெடுத்திருப்பார்கள் என்று உறுதியாக்க கூறமுடியாது. படியெடுத்தவர்கள் தமது விருப்பத்திற்கேற்றாற்போல் மாற்றியிருக்கலாம் அல்லவா.
6. இந்நூலிற்கான ஆதாரங்களை எல்லாம் நீங்கள் எங்கிருந்து பெற்றுக்கொண்டீர்கள்?
இந்த நூலிற்கான ஆதாரங்களை பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் அவ்வப்போது வெளிவந்த ஆய்வுக்கட்டுரைகளிலிருந்தும், பல தமிழகத்து பல்கலைக்கழக ஆய்வு நூல்களிலிருந்தும், வரலாற்றாய்வாளர் கலாநிதி எஸ். தியாகராஜா போன்ற வரலாற்று ஆசிரியர்களிலிருந்தும், இராமாயணம் பற்றிய பல்வகைப்பட்ட விமர்சன நூல்களிலிருந்தும் மற்றும் புவியியல் ஆய்வு நூல்களிலிருந்தும், பெற்றுக்கொண்டேன்.
7. உங்கள் படைப்புலகப் பயணத்திற்கு ஊடகங்கள் எந்தளவிற்கு பக்கபலமாக உள்ளன என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
ஒரு படைப்பாளிக்கு ஊடகங்களின் துணையில்லையேல். படைப்புக்களை மேற்கொள்வது சிரம்மானதும், படைப்பியல் ஆர்வத்தை மழுங்கடிக்கவும் செய்துவிடும். எனவே ஒரு படைப்பாளிக்கு ஊடகங்களின் துணை இன்றியமையாத்து என்றே கருதுகின்றேன். படைப்புக்கள் ஊடகங்களில் வெளிவரும் போதுதான் தனது கருத்துக்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டுவிட்டது. என்ற மன நிறைவோடு ஓர் படைப்பாளி தனது இலக்கினை அடைந்த சந்தோசத்தையும், மனத்திருப்தியையும் பெறுகின்றான்.
அந்த வகையில் எனது படைப்புக்களுக்கு புலம் பெயர் தேசத்தில் உள்ள ஊடகங்களும், தாயகத்தில் உள்ள ஊடகங்களும் பெரும் துணையாகவே உள்ளது என்றே கருதுகின்றேன். பொதுவாக புலம்பெயர் தேசத்தில் இருந்து வெளிவரும் ஒரு பேப்பர் என்கின்ற பத்திரிகையின் துணை ஆசிரியராக நான் ஆரம்ப காலத்தில் இருந்தமையால் நான் சொல்ல வந்த கருத்துக்களை மக்கள் மத்தியில் சென்றடைவதற்கு அந்த ஊடகம் எனக்குத் துணை நின்றது. அதேபோல் ஈழமுரசு பத்திரிகையும் எனது படைப்புக்களை பிரசுரித்து எனது படைப்புக்கு பக்கபலமாகின. தாயகத்திலும் வீரகேசரி, தினக்குரல் போன்ற முன்னணிப் பத்திரிகைகளும் எனது படைப்புக்களுக்கு பெரிதும் துணைபுரிந்தன.
8. எழுத்துலகில் உங்கள் இலக்கு என்று நீங்கள் எதையாவது வைத்துப் பயணித்துக்கொண்டிருக்கிறீர்களா?
சுயத்தை இழக்காமல் அறிவியல் பூர்வமாக சிந்தித்துச் செயலாற்றுகின்ற தமிழ்த்தேசிய சமூகத்தை கட்டி வளர்ப்பதுவே எனது இலக்கு.
9. புலம்பெயர் நாட்டில் வாழும் ஒரு இளம் எழுத்தாளர் என்ற வகையில் அங்கு உங்கள் இலக்கிய முன்னெடுப்புக்களுக்குப் போதியளவு ஆதரவு கிடைக்கின்றதா?
புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்ற மக்கள் யாவரும் கடுகதி வேகத்தில் இயந்திர மயமான ஒரு வாழ்வியல் ஓட்டத்தில் பயணித்துக் கொண்டிருப்பதனால் இலக்கிய முன்னெடுப்புக்களுக்கான பெரியளவு ஆதரவு ஒப்பீட்டு அளவில் உண்மையில் கிடைப்பதில்லைத்தான். ஆனாலும் உணர்ச்சி மிக்கதும், இலக்கியத் தேடல் அவாவுடைய சில இலக்கியவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களுடைய உறுதியான ஆதரவுதான் என்போன்ற படைப்பாளிகளின் படைப்புக்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பதாக அமைகின்றது. இந்நிலமையானது ஒரு படிமுறை வளர்ச்சியினூடாக எதிர்காலத்தில் இலக்கியப் படைப்புக்களுக்கான போதிய ஆதரவை நல்க்க்கூடிய புலம்பெயர் சமூக்க் கட்டமைப்பை உருவாக்கும் என நான் நம்புகின்றேன்.
10. இந் நூலைத் தொடர்ந்து தற்போதும் வேறு ஏதாவது, படைப்பு முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றீர்களா?
ஆம். தற்போது அறிவியல் ரீதியான தகவல்களை வழங்க்க் கூடியதான ஒரு படைப்பொன்றின் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றேன். பறக்கும் தட்டுக்கள். என்ற விண்வெளி அதிசயங்கள் பற்றிய படைப்பு மிகவிரைவில் வெளிவரும்.
புலம்பெயர் தேசத்திலும் தாயகத்திலும் வெளிவரும் ஊடகங்களில் தொடர்ச்சியாக ஆய்வுக்கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
நன்றி
நேர்கண்டவர் :- கவிதா ரஜீவன்
தினக்குரல்
1.08.10